மத்திய மீன்வளத்துறை சார்பில் மும்பையில் ஏப்ரல் 28 அன்று கடலோர மாநிலங்கள் மாநாடு நடைபெறுகிறது. ரூ.255.30 கோடி திட்டங்கள், மீன் விவசாய காப்பீடு திட்டம் தொடங்கப்படுகிறது.
மும்பையில் ஏப்ரல் 28 அன்று கடலோர மாநிலங்கள் மாநாடு: மத்திய மீன்வளத்துறை ஏற்பாடு
மும்பை, ஏப்ரல் 26, 2025: மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வள அமைச்சகத்தின் கீழ் உள்ள மீன்வளத் துறை சார்பில், கடலோர மாநிலங்கள் மாநாடு – 2025 வரும் ஏப்ரல் 28 அன்று மும்பையில் உள்ள ஹோட்டல் தாஜ் மஹால் பேலஸில் நடைபெறுகிறது. இந்த மாநாட்டிற்கு மத்திய அமைச்சர் திரு ராஜீவ் ரஞ்சன் சிங் என்கிற லாலன் சிங் தலைமை தாங்குகிறார். மத்திய இணையமைச்சர்கள் பேராசிரியர் எஸ்.பி.சிங் பாகேல் மற்றும் திரு. ஜார்ஜ் குரியன் ஆகியோரும் இதில் பங்கேற்கின்றனர்.
இந்த மாநாட்டில், பிரதமரின் மீன்வளத் திட்டத்தின் கீழ் 7 கடலோர மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்காக ஒதுக்கப்பட்ட ரூ.255.30 கோடி மதிப்பிலான முக்கிய திட்டங்களை மத்திய அமைச்சர் தொடங்கி வைக்கிறார். கடல் மீன்வளத்தை மேம்படுத்துதல், கடல் மீன்வள கணக்கெடுப்பு, கப்பல் தகவல் தொடர்பு மற்றும் ஆதரவு அமைப்புக்கான நடைமுறைகளை வெளியிடுதல் போன்ற பல முக்கிய முயற்சிகளும் தொடங்கப்படவுள்ளன.
சிறந்த கூட்டுறவுகள், மீன்வள புத்தொழில் நிறுவனங்கள் மற்றும் பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் கடலோர மீனவ கிராமங்களுக்கு இந்த நிகழ்வில் சான்றிதழ்கள் வழங்கப்படவுள்ளன. பயனாளிகளுக்கு கிசான் கடன் அட்டைகளும் வழங்கப்படும். குறிப்பாக, மீன் விவசாயிகளுக்கான காப்பீட்டுத் திட்டத்தை அரசு முதல் முறையாக அறிமுகப்படுத்துகிறது. இது மீன் விவசாயிகளுக்கு பிரத்யேக நிதிப் பாதுகாப்பை வழங்கும் ஒரு மைல்கல் முயற்சியாகும். இந்தத் திட்டம் இலக்கு காப்பீடு, டிஜிட்டல் அணுகல் மற்றும் விளிம்புநிலை சமூகங்களுக்கு ஆதரவு ஆகியவற்றை உறுதி செய்கிறது.
இந்த மாநாட்டில் மகாராஷ்டிரா, குஜராத், கோவா, ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களின் மீன்வளத்துறை அமைச்சர்களும், புதுச்சேரி துணைநிலை ஆளுநர் திரு கைலாஷ்நாதன் உள்ளிட்டோரும் கலந்துகொள்ள உள்ளனர்.
இந்தியாவில் மீன்வளத் துறை கிராமப்புற வாழ்வாதாரத்திற்கும் தேசிய பொருளாதாரத்திற்கும் முக்கியப் பங்காற்றுகிறது. இந்தியாவின் பரந்த கடற்கரை மற்றும் பிரத்யேக பொருளாதார மண்டலம் வளமான கடல் வளங்களைக் கொண்டுள்ளன. இந்தியாவின் கடல் மீன் உற்பத்தி 5.31 மில்லியன் டன்னாக மதிப்பிடப்பட்டுள்ளது. கடலோர மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் நாட்டின் மொத்த மீன் உற்பத்தியில் 72% மற்றும் கடல் உணவு ஏற்றுமதியில் 76% பங்களிக்கின்றன.